Friday, December 22, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம்!

தமிழகம் முழுவதும் 2018 மார்ச் 16ஆம் 
தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.
அதன்படி, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளது. வழக்கமாகப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்களும், தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்களும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறைக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். இதனால் தொலைதூரத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் உட்பட அனைத்துத் தரப்பினரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை ப்ளஸ் 2 வகுப்பு போல் காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்க வேண்டும் எனத் தேர்வு இயக்குநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது பத்தாம் வகுப்பின் பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களை காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 10.10 மணிக்கு மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும். பின்னர் 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 10.15 மணிக்கு தேர்வு எழுதத் தொடங்க வேண்டும். மதியம் 12.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும்.
இதுதொடர்பான அரசாணை மற்றும் சுற்றறிக்கை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது

No comments:

Post a Comment