Wednesday, May 25, 2016

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் 499!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. விருதுநகர் மற்றும் நாமக்கல் பள்ளி மாணவ, மாணவியர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் நோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவக்குமார் மற்றும் நாமக்கல் எஸ்.ஆர்.வி. எக்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரேமா சுதா ஆகியோர் தலா 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் தலா 498 மதிப்பெண் பெற்று 2வது இடம் பிடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின.
தேர்வு முடிவுகளை அறிய...
தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி,
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
ஆகிய இணைய தளங்களில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.
தற்காலிக சான்றிதழ்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment